Saturday, January 4, 2014

ALMIGHTY

ஸ்ரீ ராமஜயம் 
எல்லாம் அவனே 

காலையும் நீயே மாலையும் நீயே காற்றும் நீயே கனலும் நீயே 
கடலும் நீயே ஆகாயமும் நீயே பூமியுமாய் ஆதாரமானாயே 

அலைகடலாய் பரந்தெங்கும் புரண்டு அலைமகளை மார்பில் 
அலங்கரித்து அர்ச்சாவதாரமாய் அவனியில் ஆர்ப்பரித்தாயே 

ஆணாய் பெண்ணாய் அலியாய் அதுவுமிதுமாய் எதுவுமாய் 
ஆதியாய் அந்தமாய் அனைத்திலும் அந்தர்யாமியாய் ஆனாயே 

ஓங்காரமான ஒன்றாய் இலக்குமியுடன் இரண்டாய் மும்மூர்த்திகளில் 
முதல்வனாய் நால்வேதமாய் பஞ்சபூதங்களை ஆள்வாயே 

அறுசுவையாய் நறுமணமாய் சப்தஸ்வரமாய் எழேழுலகத்திலும் 
எண்திசையிலும்  எப்பொழுதும் எல்லாமும் எய்வாயே 

அங்கிங்கெனாதபடி அனைத்தையும் கடந்து உள்ளிருந்து 
இல்லையை இல்லை செய்தாயே 

அரக்கனுக்கு அரசையீன்று ஆனையை காத்து பறவையை வைகுந்தத்தேத்தி 
அனைத்தையும் அனுக்ரஹிக்கும் கற்பகம் ஆனாயே 

பரியாய் வேதத்தை உபதேசித்து மீனாய் அதைக்காத்து ராமனாய் 
அதன்வழி நடந்து கண்ணனாய் கீதையை உரைத்தாயே 

அவதாரங்களால் அறிவுரைத்தும் அஞ்ஞானிகளாயிருக்கிறோம் 
அருள் கூர்ந்து குறையில்லா வாழ்வளிப்பாயே 

நரசிம்மன் 


No comments:

Post a Comment